Monday, December 7, 2015

வற்றாத மனிதநேயம்,வெளிச்சம் போட்டு காட்டிய மழை!!

வட தமிழகத்தையும்,தலைநகர் சென்னையையும் புரட்டி போட்டது இந்த மழை என்று சொன்னால் அது மிகையாகாது!
கடந்த ௧௦௦ ஆண்டுகளில் இல்லாத அளவு பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பல வகைகளில் பாதிக்கப்பட்டது.இந்த பாதிப்புகளில் இருந்து மீள தமிழகத்துக்கு பல மாதங்கள் பிடிக்கும்.
இந்த மழை பல விதமான மனிதர்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது என்றால் அது மிகை அல்ல.மனிதம் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்பதை நமக்கு புரிய வைத்தது.
தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களில் இருந்தும் உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களும் அனுப்பி வைக்கும் நிவாரண நிதிகள்,பொருட்கள்,அண்டை மாவட்டங்களில் தமிழர்களின் கண்ணீர் துடைக்க உண்டியல் ஏந்திய நல்ல உள்ளங்கள் மூலம் குவிந்து வரும் நிவாரண உதவிகள்,தன் உயிரையும் பொருட்படுத்தாது சக மனிதர்களின் உயிரை காப்பாற்ற போராடிய தன்னார்வ தொண்டர்கள்,மதங்களையும் ஜாதிகளையும் மறந்து சக மனிதனாய் துடித்து உதவிய தோழமைகள் இவை அனைத்தும் உணர்த்திய உண்மை என்னவென்றால் அரசியல்வாதிகளின் அசிங்கம் பிடித்த வோட்டு வங்கி அரசியலால் மனிதத்தை எந்த வகையிலும் சாகடிக்க முடியவில்லை என்பது தான்.இவ்வளவு உதவிகளுக்கும் பெருமை தேடுவதற்கும்,நிவாரண நிதியை கொள்ளை அடிப்பதற்கும் மட்டுமே திட்டம் போட்டு தங்கள் “அம்மா”விடம் நல்ல பெயர் வாங்குவதற்கும் மட்டுமே செயல்படும் பிணந்தின்னி அரசியல்வாதிகளின் அருவருக்கத்தக்க அரசியல் காட்சிகள்,”ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு” குடுத்த தமிழர்களுக்கு பட்டை நாமம் போட்ட “சூப்பர் ஸ்டார்”,நிஜத்திலும் நாங்கள் கதாநாயகர்கள் தான் என்று உணர்த்திய அஜீத்,சித்தார்த்,மயில்சாமி,ராகவா லாரன்ஸ் போன்ற சில நல்ல மனிதர்கள் என பட்டியல் நீள்கிறது!!
இந்த மழை நமக்கு உணர்த்திய உண்மைகள் பல:
௧.சென்னையில் உள்ள பல கல்லூரிகள் ஆறுகளையும்,குளங்களையும் ஆக்கிரமித்து தான் கட்டப்பட்டுள்ளது!!
௨.நீர் வழித் தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட அனைத்து இடங்களிலும் பாதிப்பு அதிகம்.இயற்கையை வெல்ல மனிதனால் முடியாது!!
௩. மதங்களைத் தாண்டிய மனிதநேயம்!!
௪.எப்பொழுதும் போல வடக்குக்கு தெற்கு பற்றி கவலை இல்லை!!
௫. தன் கையே தனக்கு உதவி!!
௬.இயற்கைக்கு முன்பு பணக்காரனும்,ஏழையும் ஒன்று தான்!!நேற்று வரை லட்சங்களில் சம்பாதித்தவர்கள் கூட மொட்டை மாடியில் உணவு பொட்டலதிற்காக காத்திருந்த போது வாழ்க்கை உணர்த்திய பாடங்கள் பல!!
௭.முகம் தெரியாத மக்களையும் தன் சொந்தங்களாக தங்களுடன் தங்க வைத்து கொண்ட மனிதநேயம்!!
௮.ஒன்று பட்டால் எவ்வளவு பெரிய துன்பத்தையும் நாம் வெற்றி கொள்ளலாம் என்று நமக்கு புரிய வைத்ததற்கும்,மதங்களையும் ஜாதிகளையும் நம்மை தொலைக்க வைத்ததற்கும் இந்த மழைக்கு நாம் கண்டிப்பாக நன்றி சொல்ல தான் வேண்டும்!!

எத்தனை துன்பம் வந்தாலும் நாம் மீண்டு எழுவோம் சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவை போல,எங்கள் சென்னையை போல!!
 

2 comments: